மணமுறிவு (Divorce)
- Deva
- Oct 9, 2019
- 3 min read
Updated: Oct 14, 2019
மணமுறிவு செய்வதற்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. எத்தனை எத்தனையோ ஆசைகளோடும், கனவுகளோடும் திருமண பந்தத்தில் இணையும் இதயங்கள்,ஏன் ம(ன)ணமுறிவு பெறுகின்றன..? ஒரு மணமுறிவு அல்லது மணவிலக்கு (Divorce) நிகழ்கின்ற போது ஏதோ பொருந்தாத திருமணம் போலும். அதனால்தான் முறிந்துவிட்டது என்று எண்ணுவதுதான் நடைமுறை. ஆனால் எல்லா விதத்திலும் பொருத்தமாக இருந்த திருமணங்கள்கூட உடைந்து போகின்றனவே. அது ஏன்? "சம்பந்தப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது அல்லது எல்லை மீறுவதே" இதற்கு முக்கியக் காரணம். இந்த நிறைறோத அல்லது எல்லை மீறிய எதிர்பார்ப்புக்களினால் மண வாழ்வில் மனக்குறையும் அதிருப்தியும் ஏற்படலாம். அவற்றில் சில, கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவு கடுமையானவைகளாக இருக்கலாம் இது போன்ற மனக்குறைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் ; * "திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்"; அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. *
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையில் மக்களின் மணவாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இளைய சமுதாயத்தினரின் எண்ண சுழற்சியால் அவர்களது எதிர்ப்பார்ப்புகள் மாறி வருகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நாள்தோறும் நிகழ்கின்ற வியத்தகு நிகழ்ச்சிகளும், எழுட்சிகளும் அவர்களது சிந்தனை ஓட்டத்தை பாதிக்கின்றன. * தாங்கள் கற்ற கல்வியின் பயனாக விளைந்த கருத்து புரட்சிகள்,பிற நாட்டினர்,பிற மொழியினர் போன்றவர்களது வாழ்க்கை முறைகளை அறிந்து ஆராய்கின்ற போது நேர்கின்ற சிந்தனை மாற்றங்கள்.. இவை அனைத்தும் சேர்ந்து அவர்கள் உள்ளத்தில் பல்வேறு விதமான கற்பனைகளையும் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்துகின்றன. ஆனால் நடைமுறை வாழ்க்கையில்...?! பெருத்த ஏமாற்றமே அவர்களை எதிர் கொண்டு அலைக்கழிக்கிறது. இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப முன்னேறாத சமூக அமைப்பு, சாதிக்கட்டுப்பாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, பெண்ணடிமை போன்ற பல அவலங்களை எதிர்த்துப் போராட சக்தியற்ற நிலையில், பெற்றோரைக் காரணங்காட்டி சடங்குகள்,சம்பிரதாயம்,வரதட்சிணை என்னும் சிக்கல்களுக்குள் தங்களைச் சிக்க வைத்து கொள்கின்றனர். என்றாலும் அவர்களது நெஞ்சத்தின் அடித்தளத்தில் ஏமாற்றம் என்னும் "தீ" கனன்று கொண்டே இருக்கிறது. இதன் விளைவுதான் அண்மைக் காலமாக நிகழ்ந்து வருகின்ற ம(ன)ண முறிவுகள்.!
இந்த ம(ன)ண முறிவுகள் அனைத்தும் அறிவார்ந்த நிலையில் நடைபெறுகின்றனவா என்று ஆராய்கின்ற போது, ஒருசில ம(ன)ண முறிவுகள் அறிவு பூர்வமாகவும் பல ம(ன)ண முறிவுகள் அச்சம், சினம், ஆத்திரம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சி மேலீட்டாலும் நடைபெறுகின்றன என்ற உண்மை தெளிவாகும். * நல்ல திருமணம் எப்படித் தோற்றுப் போகும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் சொல்லவேண்டும் என்றால் "வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே பல குறிப்பிடத்தக்க குற்றங்களும் குறைபாடுகளும் இருந்திருக்கக்கூடும்" என்பதுதான். * இது போன்றமனக்குறைகள் எதனால் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் எவையெவை என்று பார்ப்போம்.
1. தொடக்க காலத்தில் மனிதன் திருமணம் என்ற பந்தத்திற்குள் தன்னைக் கொண்டு வந்தது பாதுகாப்பிற்காகவும், அடிப்படை வசதிகளுக்காவும் மட்டுமே. பின்நாட்களில் இது பல தேவைகளையும் எதிர் பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. * கூடி மகிழவும், குழந்தைகளைப் பேணவும் வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலிருந்து உயர்ந்து குடும்ப வருவாயைப் பெருக்கவும்,குறையின்றிப் பழகவும் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த எதிர்பார்ப்பு அறிவார்ந்த தோழமையாகவும் உருமாற வேண்டுமெனக் கருதப்படுகிறது. * எதிர்பார்ப்புகளும், குறியீடுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றபோது அதை எட்டுவதும்,இட்டு நிரப்புவதும் இயலாத ஒன்றாகி விடுகிறது. மணமுறிவுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
2. மணம் புரிந்து கொண்ட ஆணும், பெண்ணும் சமுதாயத்தின் கண்களுக்கு ஒரு தொகுப்புப் போன்று தோற்றமளித்தாலும் உள்ளுக்குள், தாங்கள் இருவரும் வெவ்வேறு தனித்துவம் (IDENTITY) உடையவர்கள் என்ற எண்ணம் தலைப்படுகின்றன. பெண்களது உரிமைகள் பற்றிய உணர்வுகள் மிகுந்து வருகின்ற இந்த நாட்களில், தானும் இந்தக் குடும்பத்தில் அலட்சியம் செய்ய முடியாத ஒரு அங்கம், இந்தக் குடும்பத்தின் இயக்கத்திற்கு என்னுடைய வருமானமும் அவசியம் என்ற "தன் முனைப்பு" பெண்ணுக்குள் உருவாகத் தொடங்குகிறது. * மனைவி என்பவள் "தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவள்" என்ற நினைப்பு ஆண்டாண்டு காலமாக ஆணின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது. அதிலிருந்து வேறுபட்டுச் சிந்திப்பதற்கு ஆணின் மனம் ஒப்புவதில்லை.! தனது பாலியல் தேவைகளுக்காக மட்டுமே மனைவியை அணுக கூடாது. மனைவிக்கும் பாலியல் உணர்ச்சிகள் மற்றும் பாலியல் தேவைகள் உண்டு என்பதையும் உணர வேண்டும். மனைவியை பாலுறவில் திருப்திப்படுத்த வேண்டியது கணவனின் கடமை என்தையும் உணர்ந்து செயல்பட வேண்டியது மிகமிக அவசியம். * தனக்குப் பணிவிடை செய்வதும், தன் குழந்தைகளைப் பராமரிப்பதும், தன் தாய் தந்தையர்க்குச் உதவி செய்வதும், அவள் கடமை என்று எண்ணுகிறான், நம்புகிறான். அத்துடன் நில்லாமல் அவள் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்புவேறு இன்று புதிதாகத் தோன்றியிருக்கிறது. * புதுமைப் பெண் என்று தங்களைக் கருதிக் கொள்ளாவிட்டாலும் பல பெண்களுக்கு இதில் உடன்பாடில்லை. தங்களது சுயமதிப்பு பாதிக்கப்படுவதை தங்கள் முழு பலத்துடன் அவர்கள் எதிர்க்கிறார்கள்; மனதளவில் வெறுக்கின்றார்கள். இவர்களின் எண்ணங்களுக்கிடையே இருக்கின்ற இடைவெளி விரிவடைகின்றபோது, மண விலக்கு ஒன்றே தீர்வாகத் தெரிகின்றது.
3. இன்றைய சூழலில் இளம் தம்பதியினரிடையே பாலுறவு பற்றிய எதிர்பார்ப்புகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இதிலும் சிறுகச் சிறுகப் பெண்ணின் ஆதிக்கம் உயர்ந்து வருகிறது. * இன்றைய அவசர தவறான துரித உணவுப் பழக்க வழக்கங்களால் ஆண்கள் மிகுந்த பலஹீனமடைந்து வருகின்றனர். உயிரணுக்கள்கூட மிகவும் பலஹீனப்பட்டு, பாதிக்கபப்படைகின்றது. சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஆணுக்கு ஏற்படுகிறது. அவ்வாறு நிறைவேற்ற இயலாத போது தவிர்க்க முடியாத தாழ்வு மனப்பான்மை அவனை ஆட்கொள்கிறது. இருவரும் இணைந்து அறிவார்ந்த முறையிலே இதற்குத் தீர்வு காண்பதை விடுத்து ஒருவரை மற்றவர் குறை கூறத் தொடங்குகின்றனர். * இதுபோன்ற சூழல்களில் மனநல மருத்துவர் அல்லது உளவியல் நிபுணர் போன்றவர்களை அணுகி உரிய தீர்வு காண முற்படாமல், பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயேத் தீர்க்க முயன்று, முடியாமல், மனமுடைந்து போகின்றனர்.! தோற்றுப்போகும் திருமணங்களில் இதுவும் ஒரு காரணம்.
4. இன்றைய நடைமுறையில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியர்களும் வேலைக்குச் செல்ல வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அதற்கேற்ற பெருந்தன்மையும், நம்பிக்கையும் அவர்களிடம் இருப்பதில்லை. * பணியின் நிமித்தம் வெளியில் செல்லும் பெண்கள் பலருடன் பேசவும் பழகவும் வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகின்றனர். அப்போது மனைவியின் உறவுகள் பற்றிக் கணவன் கலவரமடைகிறான். அவளது அன்பை, நேர்மையைச் சந்தேகிக்கத் தொடங்குகிறான்.

நன்றி...
வாழ்க தமிழ்...
வாழ்க வளமுடன்...
Comments